அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை

வடக்கில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் ஆராய்வதற்காக நாளைய தினம் நீதி அமைச்சரின் பங்கு பெற்றதோடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளையும் நாளை மறு தினமும் வடக்கில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் வேறு சில அமைச்சுகளின் பங்கேற்போடும் நடமாடும் சேவையினைநடாத்தவுள்ளோம். வடக்கு மாகாண மக்களுக்காகவும் குறிப்பாக இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வருகை தந்துள்ள மக்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவும் இந்த நடுமாடும் சேவையினை ஒழுங்குப்படுத்தி இருக்கின்றோம்.

அதாவது இந்தியாவிலிருந்து வந்த மக்கள் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், ஆள் அடையாள அட்டை மற்றும் மேலும் பல முக்கிய ஆவணங்கள் பெறுவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் கரிசனை செலுத்துவதற்காகவும் அதேபோல தங்களுடைய சொந்த காணிகளை மீளப்பெறுவதற்கான ஒழுங்கு முறைகளை ஏற்படுத்துவதற்காகவே இந்த நடமாட சேவையினை நாங்கள் முக்கியமாக ஏற்படுத்தி உள்ளோம்.
அதாவது, இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் மறுநாள் கிளிநொச்சியிலுமாக இரண்டு நாட்கள் நடுமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

வடபகுதியில் இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விஜயம் மேற்கொண்டோம். வடபகுதியில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை தொடர்பிலும் அதனை கட்டுப்படுத்த ஒரு விசேட அணியை உருவாக்கி போதை பாவனையை கட்டுப்படுத்த உத்தேசித்துள்ளோம். போதைப் பொருள் என்பது ஒரு சமூகம் மட்டும் பிரச்சினையாக மாறிவிட்டது. எனவே, அதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் அதிகளவில் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை கட்டுப்படுத்த ஒரு விசேட அணி ஒன்றினை உருவாக்கி அந்த அணியின் மூலம் வடபகுதியில் எவ்வாறு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது. போதைப்பொருள் விநியோகத்தர்கள் யார் அவர்களுக்கு எவ்வாறு போதை பொருள் கிடைக்கின்றது. எங்கிருந்து வடபகுதிக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பிரச்சனை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் முப்படையினர் மற்றும் பொலிசார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் இணைந்து ஒரு அணி ஒன்றினை உருவாக்கி வட பகுதியில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து போதைப் பொருள் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயவுள்ளோம் என்றார்.

அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)