
posted 22nd October 2022
அகதிகளாகப் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் - கட்டளை அதிகாரி
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவை சென்றடைய சுமார் 21 நாட்கள் ஆகும் என்றும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி கைதான தமிழக மீனவர்கள்
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையிலேயே கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைதான மீனவர்களையும் அவர்களின் படகையும் மேலதிக நடவடிக்கைக்காகக் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போதைப் பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது
மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் புதன்கிழமை (19) போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சமையல் அறையிலும் வடி சாராயத் தொழில் ஆரம்பம்
வீட்டின் சமையல் அறையில் வடி சாராயம் வடித்தவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 லீற்றர் வடிசாராயமும் கைப்பற்றப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
தெய்வநாயகம் மேனன் தலைமையிலான யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இவரைக் கைது செய்தனர். கைதானவரிடம் இருந்து 15 லீற்றர் வடிசாராயம் மற்றும் வடிசாராயம் வடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
போதைப் பொருட்களுடன் இளைஞர்கள் கைது
மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்று முன்தினம் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பொலிசாரினால் தேடப்பட்டவர் கைது
மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் 20.10.2022 அன்று குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவிருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் 5 மாடி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.
2021 ஆண்டு ஹெரோயின் போதை பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மல்லாகம் நீதிமன்றால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்திருந்த குறித்த நபர் தலை மறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் பொலிஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, யாழ் நகரில் இருந்து தீவகப் பகுதிக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்கள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், மண்கும்பான் பகுதியில் 20 வயதான இளைஞனைக் கைது செய்த பொலிஸார் அவரிடம் இருந்து 36 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.
குறித்த நபருடன் வருகை தந்திருந்த மற்றுமொரு இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
தப்பியோடிய நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து உள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள நபரே யாழ் நகர் பகுதியில் இருந்து தீவகப் பகுதிகளுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மீனின் விலை வீழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கின்றன.
அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாகவே மீன்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் கிலோ ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்ட மீன் தற்போது கிலோ 600 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY