
posted 22nd October 2022
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியுடனும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்துடனும் இணைந்ததாக வட அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இந்த தாழ் அமுக்கப் பிரதேசம் இன்றையளவில் ( 22 ) தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும்.
நாளையளவில் ( 23 ) மேலும் தீவிரமடைந்து சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடையும் . இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் ( 24 ) மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடைந்து செல்லும்.
இதன் பிற்பாடு படிப்படியாக வடக்கு ‐ வடகிழக்குத் திசையினூடாக நகர்ந்து 25ம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் மேற்குத் திசையை அண்மித்து வங்காள தேசத்தின் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km ஆக அதிகரித்தும் காணப்படுவதுடன் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதேவேளை பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு எதிர்வரும் 25 ம் திகதிவரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே இக் கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் விரைவில் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறும் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
Source:‐ Department of Meteorology, Srilanka.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)