யாழ்ப்பாணத்தின் தற்போதையநிலமை

யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று (29.10.2021) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ். மாவட்டத்தில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையே காணப்படுகின்றது .

இருந்தபோதிலும் நேற்று கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் இன்று வரை 17 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று வரை 452 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்து காணப்படுகின்றது.

இன்று வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 17,500 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் தற்போது இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது
தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு தலங்களுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே மக்கள் சற்று அவதானமாக தொடர்ந்தும் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்தபோது மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுன்றது.

மேலும் மாகாணங்களுகிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடும் எதிர்வரும் 31ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல மக்களின் நடமாட்டம் மற்றும் ஏனைய செயற்பாடுகளும் சுகாதார வழிமுறைகளைப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டு செயற்படவேண்டும்.

பொதுமக்கள் சுகாதாரநடைமுறையை பேணி கட்டுப்பாடுகளுடன் தமது அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதையநிலமை

எஸ் தில்லைநாதன்