மாதாந்த அமர்வில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் - நான் எந்த மதத்திற்கும் எதிரானவனல்ல
மாதாந்த அமர்வில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் - நான் எந்த மதத்திற்கும் எதிரானவனல்ல

யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்

யாழ்.மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தை நாக விகாரையின் விகாராதிபதிக்கு அனுப்பி வைப்பது என்றும் அமர்வின்போது தீர்மானிக்கப்பட்டது.

நான் பௌத்த மதத்துக்கு எதிரானவன் அல்லன். நான் ஒரு மதவாதியும் அல்லன் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் நாக விகாரையின் விகாராதிபதி ஆரியகுளத்தின் புனரமைப்புப் பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் சபையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நான் ஒரு மதவாதி அல்லன். அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும் அல்லன். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். ஆனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்லன். என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ்.மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காமல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே என்னைப் பற்றிய தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். அப்பகுதி புனித பிரதேசமாக இருக்கவேண்டும். நான் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன். அந்த வகையில் ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடும் அல்லது தங்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்-என்றார்.

இதேவேளை, யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள ஆரியகுளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் மாநகரசபை அமர்வின்போது பிரேரித்தார்.

நாக விஹாரையின் விஹாரதிபதி அந்த இடத்தை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அதனைத் தடுப்பதற்காக ஆரியகுளப் பகுதியில் சிவபெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு அவர் கோரினார்.
இதற்கு பதில் உரையாற்றிய முதல்வர் வி.மணிவண்ணன், குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை என்பது இந்துக்களின் கடவுள்.

ஏற்கனவே யாழ்ப்பாண நகரத்தில் மும்மத மக்களும் வாழ்கின்ற நிலையில் ஒரு மதத்தை மட்டும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது நல்லதொரு விடயம் அல்ல. அனைத்து மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இடத்தை புனித பிரதேசமாக தூய்மையாக பேணுவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் சிலையை நிறுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்-என்றார்.

மாதாந்த அமர்வில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் - நான் எந்த மதத்திற்கும் எதிரானவனல்ல

எஸ் தில்லைநாதன்