
posted 19th October 2021
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19.10.2021) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் வலி.கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் ஆகியோர் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.
அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

எஸ் தில்லைநாதன்