
posted 19th October 2021
வடக்கில் 18, 19 வயதுடைய அனைவருக்கும் கோவிட் -19 தொற்று தடுப்பூசியான பைசர் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (19.10.2021) ஆரம்பமாகவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
18, 19 வயதுப் பிரிவினருக்கு நாடளாவிய ரீதியில் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகின்றது. வடக்கு மாகாணத்திலும் அன்றைய தினம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
க. பொ. த. உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைகளில் பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களும் அவர்களின் பாடசாலைகளிலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், பாடசாலையை விட்டு விலகிய 18, 19 வயதினருக்கு அவர்களின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு 18, 19 வயது அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையை அன்றைய தினத்தில் தமது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் எதிர்வரும் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்