
posted 13th October 2021

உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அவர்களது உறவுகளுக்குரிய படிவங்கள் மரண சான்றிதழ்களாக உருமாறிடுமோ என்ற சந்தேகம் இப்போது சொந்தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தின் இணைப்பாளர் ச.திலீபன் தெரிவித்தார்.
மன்னாரில் புதன்கிழமை (13.10.2021) நடத்திய ஊடக சந்திப்பில் ;
நாங்கள் அலுவலகம் திறக்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து உறவினர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென அறிவித்திருந்தோம்;
பதிவு செய்த அனைவருக்கும் நாங்கள் இரு வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ்களை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கியிருந்தோம்;
இருவருடங்களுக்கு மேலாகியும் ஒருவித பதில்களும் இல்லாத நிலையில் சம்பத்தப்பட்டவர்கள் அந்தப் படிவத்துடன் பிரதேச அலுவலகத்திற்குப் போய் இப்படிவம் இருவருடங்களைத் தாண்டி விட்டது, அதனைப் புதுப்பித்துத் தரும்படி கேட்டதற்கு, அவர்களுக்கு இறப்புப் படிவத்தைக் கொடுத்து அதை நிரப்பித் தந்தால் நாங்கள் உங்கள் படிவத்தைப் புதிப்பித்துத் தருவோமெனக் கூறப்பட்டது.
மேலும், ஒரு சகாப்தத்திற்கு மேலாகியும், அதிகாரிகள் பதில் தராதபடியினால் எமக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும், எம்மவர் இப்போது உயிருடன் இல்லைதானா என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்களா என்று அனைவரும் கேட்கிறார்கள் எனச் சொன்னார்.

வாஸ் கூஞ்ஞ