இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

இலங்கை முழுமையும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தநிலையில் மாணவர்களை அழைத்து வகுப்பு நடத்திய யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த விரிவுரையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் மாணவர் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த அனைத்து வருடத்திலும் இசைக் கருவியைப் பிரதான பாடமாகப் பயிலும் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் நேரடியாக பங்கேற்கவேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மலையகம் உட்பட நாட்டின் வெவ்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து வகுப்புக்களில் பங்குகொண்டிருந்தனர்.
அவர்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் துணைவேந்தர் ஊடாக சுகாரத் தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த மாணவர்கள் இருவரையும் பொறுப்பேற்பதற்காக சுகாதாரத் தரப்பினர் அவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட இணுவில் பகுதிக்குச் சென்றனர்.
இருந்தபோதிலும் மாணவர்கள் இருவரும் சுகாதாரத் தரப்பினருடன் நோயாளர் காவு வண்டியில் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும், தம்மை யார் அழைத்தாலும் செல்லவேண்டாம் என்று தமது துறைத் தலைவர் தமக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் சுகாதாரத் தரப்பினருக்கு தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனார் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இசைத்துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் பி.சி.ஆர் முடிவுகள் நேற்று வெளியாகின. அவற்றின் அடிப்படையில்,
விரிவுரையாளர்கள் ஐவர், மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. மற்றுமொரு மாணவன் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

எஸ் தில்லைநாதன்