
posted 18th October 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நீண்டகாலமாக நீடித்து வரும் கடற்றொழிலாளர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டால் தமது அரசியல் கேள்விக் குறியாகிவிடும் என்ற சுயலாபத்திற்காகவே தற்போது அந்த சமூகத்தின்மீது கரிசனை கொண்டவர்களாக தம்மை காண்பித்து, அப்பிரச்னைகளை தீராதிருப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்த் தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறு கடற்றொழில் அமைச்சரும் ஈ. பி. டி. பி. கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கூறியிருககிறார்.
போராட்டம் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய ஊடகங்களுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாகவே பிரச்னைகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கடற்றொழில் அமைச்சு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து அவர்களின் பிரச்னைகளுக்குரிய அணுகு முறைகளை நான்கு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றேன்.
முதலாவது, இராஜதந்திர வழியிலானதாகும். அதற்காக செயல்பாட்டுத் திட்டமொன்றை வரைந்துள்ளேன். இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், செயலாளர் ஷிங்ரிலா, இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆகியோருடன் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இழுவைப் படகுகளை பயன்படுத்தல், அத்துமீறி எல்லை தாண்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2017ஆம் ஆண்டு இழுவைப்படகுகள் சட்டம், 2018ஆம் ஆண்டு வெளிநாட்டு கப்பல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மூன்றாவதாக, எமது கடற்றொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேண்டாத தலையீடுகள், பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.
நான்காவதாக, நீண்டகால நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை முன்னெடுப்பது. குறிப்பாக, மன்னார் வளைகுடா, பாக்குநீரிணை போன்ற பகுதிகளில் ஏற்படும் இயற்கையான விடயங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விதமான குணாம்ச ரீதியான நகர்வுகள் கடற்றொழிலார்களின் பிரச்னைக்கு தீர்வுகளை படிப்படியாக வழங்கி வருகின்றன. இதனால் தமிழ்த் தலைவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே கடற்றொழிலாளர்களின் விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதன் காரணமாகவே கடந்த மைத்திரி - ரணில் ஆட்சியில் கடற்றொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டபோது அதற்கு நாம் எதிர்கட்சியில் இருந்தாலும் ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால், அந்தச் சட்டங்களை கடந்த காலத்தில் கிடப்பில் போட்டிருந்தனர்.
தற்போது, கடற்றொழிலாளர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டால் தமது உள்ளூர் அரசில் கேள்விக் குறியாகிவிடும் ஆபத்தில் உள்ளதால் இந்த விடயத்தினை கையில் எடுத்துள்ளார்கள். இதுவொரு சுயலாபத்திற்க்கான செயல்பாடாகும் - என்றார்.

எஸ் தில்லைநாதன்