அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 23 கைது

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் காரைநகர் கடற்படை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை (13.10.2021) மாலை இந்த மீனவர்கள் வடமராட்சிக்கு நெருக்கமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

வெற்றிலைக்கேணிப் பகுதியில் வைத்து அவர்கள் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
கைதானவர்கள், காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காரைநகர் கடற்படை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.

கைதான மீனவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள அன்ரிஜென் பரிசோதனையின் பின்னரேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைதான மீனவர்களுக்கு எதிராக இரண்டு வாரங்களின் பின்னர் அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று நீரியல் வளத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17 ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 23 கைது

எஸ் தில்லைநாதன்