
posted 21st October 2021

பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி
இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் நினைத் தூபி அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தருமாறு உயிரிழந்தோரின் உறவுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும்-என்றார்.
மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் கருத்துரைக்கும்போது-
யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
தற்போது வைத்தியசாலையை நோக்கி பல்வேறு நோய் உடையவர்களும், பிரச்னை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். கோவிட் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் கோவிட் சிகிச்சைக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளன.
கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஆகவே பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள், ஏதாவது பிரச்னைகள் இருப்பின் வைத்தியசாலைகளை நாடவேண்டும். அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்தியசாலைக்கு வந்து தங்கள் நோய்கள் சம்பந்தமான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக வயோதிபர்கள், இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போடவேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தாது தமக்குரிய தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ளவேண்டும்-என்றார்.

எஸ் தில்லைநாதன்