
posted 18th October 2021

2022ம் ஆண்டுக்கான சர்வதேச கடன் சுமை குறித்த உலக வங்கியின் அறிக்கையின் படி உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட 10 உலக நாடுகளுக்குள் இலங்கை இல்லை என்பது எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் வெற்றியாகும் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் உலக கடன் சுமை உள்ள 10 நாடுகள் பட்டியலுள் உள்ளன. நமது நாடு இந்த நாடுகளிடம் கடன் வாங்கிய போதும் பொருளாதார வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஆட்சியில் மிக நீண்ட காலம் பொருளாதார அமைச்சராக பெசில் ராஜபக்ஷ இருந்து நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பினார்.
பின்னர் வந்த பொல்லாட்சியில் மத்திய வங்கி கொள்ளையடிப்பின் மூலம் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டது. அத்துடன் அமைச்சர்கள் பலர் நாட்டின் நலன்களை கொள்ளையடித்து உல்லாசம் அனுபவித்ததால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது.
தற்போது இந்த அரசு ஆட்சிக்கு வந்து இப்போதுதான் இரண்டு வருடத்தை நெருங்குகிறது. கொரோனாவால் கடுமையாக வீழ்ச்சி அடைந்தும் கடன் சுமை கொண்ட 10 உலக நாடுகளில் நமது நாடு இல்லை என்பது ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொண்ட எமது அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத்தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்