
posted 22nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஸ்கான் பண்ணப்படும் மனித புதைகுழி
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடப்பட உள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக நேற்று (21) செவ்வாய் இடம்பெற்று நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு அவர்கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இன்று (21) இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.
இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் இம் மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது? எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக சோதனை நடைபெறும்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கான் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)