
posted 6th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (05) காலை ஞாயிறு முன்னெடுக்கப்பட்டது.
- வடக்கு - கிழக்கில் நில அபகரிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும்
- மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை உடனே நிறுத்தவேண்டும்
- செட்டிகுளத்தில் கீழ்மல்வத்தோயா திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள குடியேற்றங்களை தடுத்துநிறுத்து
- காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்கு
- இந்து ஆலயங்களை ஆக்கிரமிக்காதே. அவற்றில் விகாரைகளை அமைக்காதே
- திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து
போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன், இரா. சாணக்கியன், தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ந. கருணாநிதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், புதிய ஜனநாயக மாக்ஸ்சிக லெனினிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)