
posted 9th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
திருமலையில் நூல் அறிமுக விழா
சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்தக்தின் தலைவருமான இரா. துரைரெத்தினத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் அறிமுக விழா திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது.
திருமலை கலை, இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை, திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த அறிமுக விழா நடைபெறவுள்ளது.
எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியாலாளருமான திருமலை நவம் தலைமையில் நடைபெறவிருக்கும் அறிமுக விழாவில், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி. தண்டாயுதபாணி முதன்மை விருந்தினராகவும், சிரேஷ்ட எழுத்தாளர் க. தேவகடாட்சம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினத்தின் மேற்படி கிழக்கில் சிவந்த சுவடுகள் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் மட்டக்களப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் நடந்த படுகொலைகளின் ஆவணத்தொகுப்பாக இந்த நூல் அமைந்திருப்பது முக்கியத்துவமிக்கதாகும்.
1956ஆம் ஆண்டு முதல் அண்மைக்காலம் வரை கிழக்கில் நடந்த படுகொலைகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக கிழக்கில் சிவந்த சுவடுகள் நூலைக் கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய வாக்கு மூலங்கள், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், செய்திகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு இரா. துரைரெத்தினம் இந்த நூலை எழுதியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)