
posted 18th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில் - சபா குகதாஸ்
2024 ஆண்டுக்கான 78வது பாதீட்டில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன் அமைப்பதற்கான முன்மொழிவு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கான கோரிக்கைகளை பல தடவை தமிழர் தரப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் முன் வைத்தும் ஏமாற்றி வரும் சமநேரம் குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக மிட்டாய் காட்டுகிறார். இதற்கு இனவாதி சரத் வீரசேகர கொம்புக்கு மண் எடுப்பது போல இனவாதத்தை தூண்டி தன்னுடைய அரசியலை நடத்துகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் தமிழர்கள் சார்ந்து கொண்டுவரப்பட்ட பல முன்மொழிவுகள் கடதாசிகளில் மட்டுமே இருந்தன நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதே போன்று இம்முறையும் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயற்பாடாகும். உண்மையாக முதலாவது பொறுப்புக் கூறலின் ஊாடாக பக்க சார்பற்ற சுயாதீன விசாரணை அதன் பின்னர் தான் பரிகார நீதி இவ்வாறான ஒழங்கு முறை மூலமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுவே பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையும் ஆகும்.
கடற்தொழில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகப் பெரும் ஏமாற்று காரணம். வடக்கு கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர் நோக்கும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் அட்டைப் பண்ணை விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு ஐனாதிபதி இதுவரை அவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்காமல் பிரச்சினைகளை கண்டும் காணாதவர் போல இருந்து கொண்டு கடல்வள அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வேடிக்கையாக உள்ளது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)