
posted 3rd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறப்பு
கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலைக் கட்டடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மெலிண்டன் கொஸ்தா கௌரவ அதிதியாகவும், முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான மருத்துவர் எம்.பீ. அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.சீ.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் இப்ஹாம், பாலமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.ஜே. நௌபல், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், வைத்தியர்கள், பிராந்திய ஆய்வு கூட மேற்பார்வையாளர் ஏ எம் எம். சலீம், சுகாதார உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மிகவும் குறைந்தளவிலான நிதியினைக் கொண்டும் பிராந்திய சுகாதார நிறுவனங்களில் உள்ள வளங்களைக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிராந்திய ஆய்வுகூடத்தில் பிராந்திய வைத்தியசாலைகளில் எடுக்கப்படுகின்ற நோயாளர்களின் குருதி மற்றும் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளதுடன், விசேட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் முடிவு அறிக்கைகள் உரிய நேரத்துக்குள் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒன்லைன் மற்றும் குறுஞ்செய்தி ஊடாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆய்வுகூடத்தின் ஊடாக பிராந்திய மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)