
posted 29th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இனம், மதம் கருத்துத் தெரியாத அரசியல்வாதி - கவலைகொள்ளும் அப்துல் மஜீட்
முஸ்லிம் காங்கிரஸ் என்பது மத ரீதியான கட்சி என பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் கூறியிருப்பது முட்டாள்தனமான கருத்தாகும். இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு பிள்ளையானின் கட்சியில் "தமிழ்" என்ற இன ரீதியிலான பெயர் இருக்கிறதோ அதே போல் முஸ்லிம் என்பது மத பெயர் அல்ல, மாறாக இனத்தின் பெயர் என்பதை தெரியாதவராக பிள்ளையான் உள்ளார்.
முஸ்லிம்களின் மதம் இஸ்லாம் என்பதாகும். முஸ்லிம் என்பது இனமாகும். இனவாத கட்சிகள் வேண்டாம் எனும் போது தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் கட்சிகளும் கலைக்கப்பட வேண்டும். அவ்வாறு கலைக்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியும் கலைக்கப்படுமாயின் அதனை நாம் வரவேற்போம்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்த பின்தான் இனரீதியிலான பிரதேச செயலகங்கள் உருவாகின என்ற பிள்ளையானின் கருத்தும் அவருக்கு வரலாற்று அறிவில் பூஜ்யம் என்பது தெரிகிறது.
1987ஆம் ஆண்டு கல்முனையில் இனரீதியில் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது தெரியாதா? இந்த உப செயலகத்தை கூட ரத்துச்செய்ய முடியாதவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களும் எம்பீக்களும் இருந்தனர் என்பது பிள்ளையானுக்கு தெரியாதா? காட்டுக்குள் நீண்டகாலம் கிடந்ததால் இவை பிள்ளையானுக்கு தெரியாதிருந்திருக்கலாம்.
கோரளைப்பற்று மேற்கு மத்திக்கிடையில் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் என சொல்லும் பிள்ளையானுக்கு கல்முனை பிரதேச செயலக கட்டிடத்துக்கும் உப செயலக கட்டிடத்துக்குமிடையில் 100 மீட்டர் தூரம் கூட இல்லை என்பது தெரியாதா?
கோரளைப்பற்று என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தும் அதனை இரண்டாக பிரிக்கும் சூழலை ஏற்படுத்தியது யார் என்று தெரியாதா?
ஏதோ ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு நன்மை செய்தது போல் பிள்ளையான் சொல்கிறார். ஆனல் முஸ்லிம்கள் 98 வீதம் உள்ள கல்முனை நகருக்கென தனியான கிராம சேவை உருவாக்காமல் இன்னமும் மணைச்சேனை கிராம சேவைக்குள் விட்டு வைத்திருக்கும் கோழைதான் ரவூப் ஹக்கீம். அமைச்சு அதிகாரம் பல இருந்தும் அவர் இதை செய்யவில்லை.
ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் ஏதாவது புலம்புவாரே தவிர முஸ்லிம் சமூகத்துக்கு எதையும் பெரிதாய் சாதித்ததில்லை. இது பிள்ளையானுக்கு தெரியாது.
உண்மையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பிள்ளையான், வியாழேந்திரன், தமிழ் கூட்டமைப்பினரால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும். போராளியாக இருந்து பிரபாகரனிடமிருந்து பிரிந்து ஜனநாயகத்துக்கு வந்த பிள்ளையானும் இனவாதமாக செயற்படுவது கவலை தருகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)