
posted 4th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்திய நிதி அமைச்சர் உறுதியளித்தார்
“திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனமைத்துத் தந்ததுபோல் திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாக பரிசீலித்து அதற்கு உதவும்”என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழியை ஆறு. திருமுருகனிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, ஆறு. திருமுருகன், போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இன்று (03) ஓரளவு பேணிப் பாதுகாக்கின்றோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கருங்கல்லால் பெருங்கோயிலாக புனரமைத்துத் தர இந்தியா முழு உதவி வழங்க வேண்டும் என்று கோரினார்.
அவரின் இந்தக் கோரிக்கையை செவிமடுத்த இந்திய நிதி அமைச்சர், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கோணேஸ்வரத்தையும் புனரமைக்க உதவ முடியும். அதற்கான முன்னேற்பாடுகள், முறைப்படியான கோரிக்கைகள், அனுமதிகளைப் பெறுவதற்கான நடவடிகைகளை மேற்கொள்ளுங்கள்” என்று கூறினார் என்று ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.
இதேசமயம், திருக்கேதீஸ்வரம் ஆலயம் இந்திய அரசின் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படுவதில் ஆறு. திருமுருகனும் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)