
posted 9th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
2ஆவது நாளாகவும் தொடர்ந்தது தாபால் ஊழியர்களின் போராட்டம்
தாபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக தபால் மாஅதிபரால் அறிவிக்கப்பட்டும், தபால் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துதவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தபால் துறை அமைச்சர் கையெழுத்திட்ட நிலையிலும், தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (09) வியாழக்கிழமையும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இதனால் நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் முற்றாக முடங்கியதுடன், இரண்டாவது நாளாகவும் தபாலகங்கள் உப தபாலகங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன.
பழம் பெருமை மிக்க நுவரெலிய தபால் நிலையத்தையும், அத்தகையபெருமை மிக்க கண்டி தபாலகத்தையும் விற்பனை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்க முன்னணி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
48 மணி நேர இந்த வேலை நிறுத்தப் போராட்டம், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் குறிப்பிட்டபடி இன்று (09) வியாழக்கிழமையும் முழு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இதேவேளை மேற்படி போராட்டத்தின் முக்கியஸ்த்தர்களான தொழிற்சங்கத் தலைவர்கள், கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து இது விடயமாக மகஜர் ஒன்றை சமர்ப்பித்து விளக்கமளித்துள்ளதுடன், நாட்டின் இந்த பாரம்பரிய சொத்துக்களை விற்பனை செய்யவிடாது பாதுகாக்க ஆவன செய்யுமாறு கோரியுள்ளதாகவும், அரசாங்கம் தமது கோரிக்கையை உதாசீனம் செய்யுமாயின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தபால் தொழிற்சங்கங்கள் தள்ளப்படலாமெனவும் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தலைவர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
இந்தியாவின் தாஜ் சமுத்திரா ஹோட்டல் நிறுவனத்திற்கு முதலீட்டுக்காக வழங்குவதற்கு அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நுவரெலிய தபாலகத்தின் முன்னால் தபால் ஊழியர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெறவும் ஏற்பாடாகியிருந்தது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)