
posted 1st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்ந்து நடக்கும்
கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்;
நீதிமன்றத்தின் பாதுகாப்பிலுள்ள மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், உடுப்புக்கள் தவிர்ந்த ஏனைய சான்றாதார பொருட்கள் மேலதிக பகுப்பாய்வுக்காக தொல்லியல் மேற்படிப்பு நிறுவனத்துக்கு அனுப்ப நீதிமன்றத்தின் உத்தரவை பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
எமக்கு இருக்கும் நிதியை கொண்டு அகழ்வுப் பணியை நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் புதைகுழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது. இரண்டு சி.சி.ரி.வி. கமெரா தொகுதியானது எனது வேண்டுகோளையடுத்து அண்மையில் அரசாங்க அதிபரினால் பொருத்தப்பட்டுள்ளது.
இம்முறை அகழ்வுப்பணி நடைபெறும்போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் எவ்வளவு தூரத்துக்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நிதியை மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த பிரதான கணக்காளர் தான் கையாளுகிறார். நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப்பணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)