
posted 20th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொத்துவில் பஸ் டிப்போ தரம் உயர்த்தப்பட்டது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முசாரபின் முயற்சியில் பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
புதிய பொருளாதார மூலோபாயங்களை வலுப்படுத்துவதற்காக பொத்துவில் மற்றும் அறுகம்பே சுற்றுலா வலயத்தை ஒருங்கிணைத்து போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக நேற்று (19) தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பொத்துவில் பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் நட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யு. டி. வீரசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்நிலையில் குறித்த பஸ் டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் எம் முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பஸ் டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் அதிதிகள் கோலாகலமாக அழைத்து வரப்படுவதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. உப பஸ் டிப்போ உருவாக்கத்திற்கு முயற்சி செய்தவர்கள் மற்றும் பிரதம கௌரவ அதிதிகள் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பொத்துவிலுக்கான உப பஸ் டிப்போவை பிரதான டிப்போவாக தரமுயர்த்தித்தருமாறு பொத்துவில் மக்கள் விடுத்த கோரிக்கையை பொத்துவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முசாரபின் பெரும் முயற்சியி்னால் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)