
posted 2nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கு பிரதம செயலாளர் கல்முனை மாநகர சபைக்கு திடீர் விஜயம்
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க கல்முனை மாநகர சபைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். இதன்போது மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து நேரடியாக கண்டறிந்து கொண்ட பிரதம செயலாளர் அவர்கள், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் கல்முனை மாநகர சபையின் அண்மைக்கால முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு பிரதம செயலாளர் பாராட்டும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, கணக்காளர் கே.எம். றியாஸ், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதி உதவியாளர் சசி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
திருமலைக்கு சென்றார் நிர்மலா
(ஏ.எல்.எம்.சலீம்)
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயம் மேற்கொண்டார்.
திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமனை ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதாராமன் இன்று திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், இங்கு பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)