
posted 27th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி
சந்தேக நபரை துரத்தி சென்றபோது ஆற்றில் குதித்து காணமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சாவகச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக் கிரியை நேற்று (26) ஞாயிற்றுக்கிழமைஅவரின் இல்லத்தில் நடைபெற்றது.
பூரண அரச மரியாதையுடன் நடைபெற்ற அவரின் இறுதிக் கிரியையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தினார். அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டதுடன், அவருக்குரிய கொடுப்பனவுகளை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்தார்.
இந்த இறுதிக்கிரியையில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா - எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)