
posted 6th November 2022
வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வவுனியா, நொச்சிமோட்டைப் பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
05.11.2022 அதிகாலை 12.15 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது. இதன்போது பஸ்ஸின் சாரதியும், இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதேவேளை, பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதியான உடுப்பிட்டியைச் சேர்ந்த சிவபாலன் சிவரூபன் (வயது 32) என்பவரே உயிரிழந்தவராவார்.
அத்துடன் பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரும் மரணமடைந்தார். வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக குறித்த பஸ்ஸில் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த யுவதி யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியாவார். நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது - 23) என்பவரே உயிரிழந்தார்.
யாழ். பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவியான அவர், நேற்று முன்னைய தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து ஏற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த மற்றுமொரு அதி சொகுசு பஸ்ஸின் சாரதி தனது பஸ்ஸை விபத்தில் இருந்து தடுப்பதற்காக வீதியின் ஓரமாகச் செலுத்தி இன்னொரு பாரிய விபத்தைத் தவிர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY