
posted 17th November 2022
திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வயிரமுத்து ஜெகதாசால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே இவ்வாறு இன்று (17) ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது.
அந்த பிரேரணையில் குறிப்பிடப்ட்ட முழுமையான விபரம் வருமாறு;
தொல்பொருள் என்று கூறிக்கொண்டு பல்லாயிரம் ஆண்டு காலம் சைவத்தமிழ் வரலாறுகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளால் இன,மத முரண்பாடுகளை தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்த முனைகின்றது இதனை அனுமதிக்க முடியாது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக மாற்றப்பட வேண்டும்.
இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம்.
அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டுவருவதும் ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடைய வைத்திருக்கின்றது.
தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான்.
ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவு செய்ய வேண்டிய அவசியமென்ன?
எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும். கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பனவற்றை தடுத்து ஆலய வளாகத்தை சூழ உள்ள பிரதேசங்களை புனித பிரதேசமாக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே இச் செயலினை கௌரவ சபை கண்டிப்பதுடன் இக் கண்டன தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி ,பிரதம மந்திரி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)