
posted 22nd November 2022
“சாயம்” எனும் கலைக்கூடத் தொணியில் “வரலாற்றின் மீதான கழிவிரக்கம்” எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருகோணமலை செல்லம்மா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக திருமதி. சரஞ்சா சுதர்சன், மாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம். சிறப்பு விருந்தினராக திரு.ந. விஜேந்திரன், ஓய்வு நிலை வலயக்கல்வி பணிப்பாளர் திரு ஆர். நிமலரஞ்சன், பிரதி மாகாண பிரதி கல்வி பணிப்பாளர், கிழக்கு மாகாணம் இக்கண்காட்ச்சியில் வைத்தியர்கள் பெற்றோர், நலன்விரும்பிகள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கண்காட்சியில் T. பிரவாகினியால் வரையப்பட்ட திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சம்மந்தமான ஓவியங்கள் அங்கே காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்காட்சிப்படுத்தலானது திருக்கோணமலைக்கு உரித்தான தமிழரின் விளிம்பு நிலை வரலாறுகளினால் தொகுக்கப்பட்ட ஓவியங்களாகும்.
திருக்கோணமலை மண்ணுக்கு உரித்தான வரலாறு அன்று நிகழ்வுகளாகவும், காலப்போக்கில் சேகரிப்புகளாகவும், இருந்து பின்னர் அதிகாரத்துவத்தினால் பல சாயமிடப்பட்டு இன்று வாசப்பிற்குட்படுத்துவதற்கு ஐயம் கொள்ளும் தகவல்களாக மாறி வருகின்றது.
இக் கலைக்கூடத்தின் நோக்கம் எம் மண்ணினுடைய அடையாளத்தை அறிய விரும்பியவளாக பின்நோக்கும் போது, பெரும்பாண்மையாக பேசப்படும் வரலாறுகள் அவற்றின் பார்வையில் தன்னிலை மறைக்கப்பட்டு சாயமிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
சிதறடிக்கப்பட்ட வரலாற்று சாயங்களும், திரிவுபடுத்தப்பட்ட வரலாற்று சாயங்களும், அழிக்கப்பட்டு புதிய வரலாறாக சாயமிடப்பட்டு வரும் வரலாறுகளையும் அறிந்து உண்மை வரலாற்றின் மீது கழிவிரக்கம் கொள்வதாகும். இங்கு கழிவிரக்கம் என்பதை தவறுக்காக வருந்துவதற்கோ. குற்ற உணர்விலோ எடுத்துக் கொள்ளவில்லை.
இங்கு விளிக்க விழைவது எமக்கான அடையாளத்தை திடாகாத்திரமாக தக்க வைத்துக் கொள்ளத் தவறியவர்களாக அடுத்த தலைமுறையினர் உருவாகிவிடக்கூடாது என்பதே ஆகும். இலங்கையின் வரலாற்றை அறிய முற்படும் போது எழுத்துரு வடிவிலும், கலை வடிவிலும் சிங்கள பௌத்தக் கலைகள் அதிகளவு வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றது. அதேவேளை தமிழர் கலை வரலாறுகள் நீண்ட பாரம்பரியமானவை எனும் கருத்து உணர்வுடன் பேசப்பட்டு விடுவதுடன், இடைச் செருகல்கள் இல்லாத தமிழர் தனி அடையாளத்தினை ஆவணப்படுத்தலைத் தக்க வைத்துக்கொள்ள தவறுகின்றோம்.
அடையாள நருக்கடிக்குள் அவசியம் அறிய வேண்டிய திருக்கோணமலை மண்ணுக்குரித்தான குறிப்பிட்ட வரலாறுகளை தெரிவு செய்து பத்து ஓவியங்களாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அழிக்கப்பட்டதும், நினைவுகூற வேண்டிய வரலாற்றுச் சாயமாகவும் படைக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)