சட்ட நடவடிக்கை

கல்முனை மாநகர சபை எல்லையினுள் நடமாடும் கட்டாக்காலி ஆடு, மாடுகள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகர முதல்வர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், சந்தைகள், பஸார்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பயணிகளும், வர்த்தகர்களும், நுகர்வோரும் பெரும் இடையூறுகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

அவ்வாறே மைதானங்கள், கடற்கரை, சிறுவர் பூங்காக்கள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் நடமாட்டங்களினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதுடன் குறித்த இடங்கள் கடுமையாக மாசுபடுத்தப்பட்டும் வருகின்றன. இதனால் சசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் வீசுகின்றது.

இவை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 48 இன் கீழ் கல்முனை மாநகர சபையினால் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறு மாடுகள் கைப்பற்றிப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் மாநகர சபையினால் தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தது. இனிவரும் காலங்களில் இதற்கு மேலதிகமாக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News