
posted 24th November 2022
கனடாவுக்கு அனுப்புவதாக கூறித் தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக் கொண்டதாகவும், 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை தங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் அவரிடம் நாம் பணத்தை மீளக் கேட்ட போது, கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தைச் செலுத்தி விட்டதாகவும், தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களிடம் தெரிவிக்கின்றார் எனவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாங்கள் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து மீளப் பெற்று தரவேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்சம் ரூபாயும், மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)