
posted 2nd November 2022
மன்னாரில் சில கிராமங்களை உள்ளடக்கிய பிரதான வீதியால் பிரயாணம் செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதுடன் அவசர நோயாளர்களை வாகனங்களில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுவதையிட்டு வீதியை உடன் புனரமைத்து தரும்படி வேண்டி இவ் கிராம மக்கள் வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
இவ் சம்பவம் மன்னார் எழுத்தூர் பகுதியில் புதன்கிழமை (02.11.2022) காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.
இது தொடர்பாக இவ் மக்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களது இன்றைய (02.11.2022) இவ் கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார் நகர சபையின் பராமரிப்பில் இருந்து வரும் எழுத்தூர் சந்தியிலிருந்து தரவன்கோட்டை முக்கிய வீதியானது 2000 ஆம் ஆண்டளவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
ஆனால் ஒரு வருடத்துக்குள்ளேயே புனரமைப்பு செய்யப்பட்ட இவ் வீதி மிகவும் பாதிப்படைந்து குன்றும் குழியுமாக அவல நிலைக்கு மீண்டும் உள்ளாகியது.
இவ் வீதியால் முக்கியமாக பயணிக்கும் கிராம மக்கள் தோட்டக்காடு . சாந்திபுரம் , தரவன்கோட்டை , கீரி மற்றும் ஜீவன்புரம் ஆவர்.
இவ் வீதியை புரனமைப்பதற்காக அன்மையில் வெளியிடப்பட்ட ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் இவ் வீதியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இவ் வீதி மன்னார் நகர சபையின் பராமரிப்பில் இருக்கும் வீதியாகும்.
இது தொடர்பாக இத்தனை கிலோ மீற்றர் இவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இவ்வளவு காலத்துக்குள் இது பூர்த்தி செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் விளம்பரப்பலகையும் போடப்பட்டிருந்தது.
ஆனால் இவ் விளம்பரப்பலகை இவ் வீதி வேலை தொடங்குவதற்கு முன்பே போடப்பட்டு ஓரிரு மாதங்களுக்குள் அகற்றப்பட்டு இவ் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
ஆனால் இந்த வீதி தற்பொழுது எவரும் பயணிக்க முடியாத நிலையில் மிக மோசமான முறைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இதனூடாக பயணிப்போர் விபத்துகளுக்கு உள்ளாகும் நிலையும் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் இருக்கும் வயோதிபர்கள் பாடசாலை பிள்ளைகள் நோயாளிகள் யாவரும் பயணிக்கும் ஒரே பாதையாக இது காணப்படுகின்றது.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் தோட்டக்காடு கிராமத்தில் ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டது. அப்பொழுது முற்சக்கர வண்டியில் அவ் நோயாளியை கொண்டு செல்ல முற்சக்கர வண்டி ஓட்டுநர் எவரும் வீதியின் அவலநிலையால் முன்வரவில்லை.
இவ்வாறான சூழ்நிலையை கவனத்தில் எடுத்தே இவ் வீதியை உடன் புனரபை;பு செய்யும்படி இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என இவ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)