
posted 10th November 2022
யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி, சாரதி அனிமதிப் பத்திரம் என்பன நாளை வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி. சிவபரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது நாளை வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு - யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தினதும் வழித்தட அனுமதிப் பத்திரங்கள், சாரதி அனுமதிப்பத்திரம் முகமாலையில் பரிசோதிக்கப்படுவது எனவும், அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கைதடியில் உள்ளூராட்சி அமைச்சில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், எனவே நாளை முதல் (11) யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் தங்கள் வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை தங்களுடன் உடைமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும், அது தவறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்த பேருந்து வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)