பேசாலை கலைஞர் 'கலைச்சுரபி' கிறிசாந்து டேவிற் குரூஸ்

மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் புதன்கிழமை (16.11.2022) அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடாத்திய விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெற்றவர்களில் 15 கலைஞர்களில் ஒருவரான கிறிசாந்து டேவிற் குரூஸ் மன். கலைச்சுரபி விருதை பெற்றுள்ளார்.

மன்னார் பேசாலை கிராமத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். தமது இளம் பராயத்திலே மரபுக்கலைகளின்பால் ஆர்வமும் ஊக்கமும் கொண்டவராவார்.

பல்வேறு மரபு நாடகங்களில் பிரதான பாத்திரமேற்று மேடைகளில் தோன்றும் இவர் முக்கியமான பிற்பாட்டுக் கலைஞருமாவார்.

சிறந்த பாடகர் என்பதனால் அநேக மேடைகளில் பாடல்கள் பாடி ரசிகர்களினை மகிழ்விப்பவராய் இருக்கின்றார். அத்தோடு கிராமிய சடங்காச்சார நிகழ்வுகளை கிராமமட்டத்தில் முன்னின்று நடத்துபவரும் இவராவார்.

திருமணத்தில் மத்தாளக்காரராய் காணப்படும் இவர் மரண வீடுகளில் ஒப்பாரிக் கலைஞராகவும் இருக்கின்றார். கில அம்மானை மற்றும் தோத்திரப் பாடல்களை இவரே யாத்துப் பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட கலைபண்பாட்டு வளர்ச்சிக்கு இவர் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி மன்னார் பிரதேச கலை பண்பாட்டுப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை இவருக்கு 'மன். கலைச்சுரபி' விருது வழங்கி கௌரவித்தது.

பேசாலை கலைஞர் 'கலைச்சுரபி' கிறிசாந்து டேவிற் குரூஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)