
posted 26th November 2022
கிழக்கிலிருந்து வெளிவரும் "தென்றல்" சஞ்சிகைக்கு உயர் விருது!
கிழக்கிலிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த பதினைந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகைக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் போது விருது வழங்கிக் கௌரமளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய இந்த விழாவின் போது விருது மற்றும் சான்றிதழினை சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் பெற்றுக் கொண்டார்.
இந்த தென்றல் சஞ்சிகை ஈழத்தில் மட்டுமன்றி, ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நல்லுலகம் எங்கணும் கலை மணம் பரப்புகிறது. திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியரும், ஊடகவியலாளருமான கதிரேசபிள்ளை கிருபாகரன் என்ற தனி மனிதன் "தென்றல்" சஞ்சிகையை ஆரம்பித்தார்.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் பணிப்பாளராக இருந்த மறைந்த அருட்தந்தை த. சிறிதரன் சில்வெஸ்டரின் திருக்கரங்களால் 2008 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி காலாண்டுச் சஞ்சிகையான "தென்றலின்" கன்னி இதழ் விரிக்கப்பட்டது.
இச்சஞ்சிகை அரங்கேற சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த பல்வேறு பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசியராகவும் பணிபுரிந்த மறைந்த வீ.சு. கதிர்காமத்தம்பியின் வழிகாட்டலும், ஊக்கமும் பக்க பலமாக அமைந்தன.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல், மூத்த எழுத்தாளர்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்தல், மாணவர்களின் அறிவுப் பசிக்கு விருந்தூட்டல், மட்டக்களப்பின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிக் கொணர்தல் ஆகிய இலக்கினை நோக்காகக் கொண்டு, "தென்றல்" சஞ்சிகை உலகில் காலடி பதித்தது.
இவ்வாறாக பல்வேறு விமர்சனங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, பதினைந்தாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ள "தென்றல்" இன்னும் பல ஆண்டுகள் தரணியில் பயணிக்க வேண்டுமென்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY