
posted 3rd November 2022
வலி - வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை (02) தெல்லிப்பழையில் போராட்டம் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி - வடக்கில் 1,600 ஏக்கர் மக்களுக்கு சொந்தமான காணிகளை தேசிய பாதுகாப்பின் பெயரால் அரசாங்கம் சட்டவிரோதமாக சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின்பேரில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள் பொது அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவினர்களின் சங்கம், வலி - வடக்கு மீள்குடியேற்ற குழு, கடற்றொழிலாளர் அமைப்புகளும் ஆதரவு வழங்கினர்.
புதன் முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை சந்தியில் ஆரம்பமான போராட்டம் பேரணியாக சென்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் வரை சென்றிருந்தது. பின்னர், வீதியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் செயலகத்தையும் முற்றுகையிட்டிருந்தனர்.
சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ள 1600 ஏக்கர் காணிகளுடன், இராணுவம் தற்போது ஆக்கிரமித்துள்ள மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவிக்க வேண்டும்.
- இந்த மண் எங்களின் சொந்தமண்
- எமது நிலம் எமக்கு வேண்டும்
- எமது கடல் எமக்கு வேண்டும்
- இராணுவமே வெளியேறு
- கடற்படையே வெளியேறு
- வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்
என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள் இது சார் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் யாழ்., கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)