
posted 16th November 2022
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. மக்கள் போராட்டங்கள் காரணமாக இவை தடைப்பட்டன. இந்நிலையில், வடக்கு ஆளுநர் இந்தக் காணிகளை வேறு வழிகளில் சுவீகரிப்பது தொடர்பில் கலந்துரையாட பிரதேச செயலர்களை அழைத்திருந்தார்.
இந்தக் கூட்டம் நேற்று (15) மதியம் ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெறவிருந்தது. இதனைத் தடுக்கும் முகமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள்;
- “எமது நிலம் எமக்கு வேண்டும்”
- “தமிழ் அதிகாரிகளே! ஆளுநரின் பதவிக்கு துணைபோகாதீர்கள்” > “தமிழர்களின் நிலங்களே அபகரிக்காதே”
- “ஐ.எம்.எவ். உதவி பெறுவதற்கு நாடகமே”
- “இனப்படுகொலை இராணுவமே தமிழர்களின் நிலங்களை அபகரிக்காதே”
- “ரணில் - ராஜபக்ஷ அரசே! கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து”,
- “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”
என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)