கலை கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க கிராமங்கள்தோறும் கலா மன்றங்கள் உருவாக வேண்டும்.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எமது கலை கலாச்சாரம் நவீன தொலை தொடர்பு வளர்ச்சியால் பல்வேறு பொருளாதார செயற்பாடுகளாலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. கிராமங்கள்தோறும் கலா மன்றங்களை உருவாக்கி கலை பண்பாட்டை பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமை (16.11.2022) மன்னார் மாவட்ட செயலகமும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து மன்னாரில் நடாத்திய புத்தக வெளயீடும் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவித்த நிகழ்வுக்கு தலைமைதாங்கி அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்றைய நிகழ்வைப் பார்த்து எவரும் நினைக்கலாம் நாட்டில் பிரச்சனை இல்லையென்று. நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எமது கலை கலாச்சாரம் நவீன தொலை தொடர்பு வளர்ச்சியால் பல்வேறு பொருளாதார செயற்பாடுகளாலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த சவால்களை எதிர்த்து நாம் எமது கலை கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்த சவால்களை எமது இளைய தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடற்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

எங்களுக்கு என்று ஒரு பண்பாடு இருக்கின்றது. வந்தோரை வரவேற்றல். பெரியோரை கனம்பண்ணுதல் பெற்றோரை மதித்தல் நன்றியுள்ளவர்களாக இருத்தல் முதியோரை பராமரித்தல் இவர்களின் சொல்லை கேட்டு நடத்தல் போன்ற பண்பாடு எம்முடன் பின்னி பிணைந்திருக்கின்றது.

இந்த பண்பாடு இன்றைய எமது சிறிய தலைமுறைக்கு ஒரு சவாலாக காணப்படுகின்றது.

இந்த சவாலை இளையோர் எதிர்கொள்ள அவர்கள் சிந்திக்க இவ்வாறான நிகழ்வுகள் அவசியமாகின்றது.

இதை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணம் கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சு இதற்கென நிதியை ஒதுக்கி இவ்வாறான நிகழ்வை மாவட்டந்தோறும் நடாத்துகின்றது.

எம்மிடம் நிதி பற்றாக்குறையாக காணப்படுகின்றபோதும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை இவ் நிகழ்வை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற சிந்தனையில் இதை முன்னெடுத்துள்ளது.

அதிலும் எமது சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனின் முயற்சியே இதற்கு பெரும் சாதனையாக இருக்கின்றது.

இங்கு வெளியீடு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டுக்கும் மன்னார் கலை பண்பாட்டுப் பேரவை பெரும் ஆக்கமும் ஊக்கமும் கொண்டிருந்தது.

எமது கலை பண்பாடு எம் ஒவ்வொருவரினதும் வாழ்விலும் தெளிவுபெற வேண்டும். எமது மாவட்டத்தில் ஒரு சிலர் கலை பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என அரும்பாடுபட்டு வருவதும் கண்கூடு.

ஒவ்வொரு கிராமத்திலும் கலா மன்றங்களை உருவாக்கி கலை பண்பாடுகளை வளர்த்து பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான கலைஞர்களையே இன்றையத் தினம் நாம் கௌரவிக்கின்றோம். அத்துடன் பல சவால்களுக்கு மத்தியிலும் எமது கலை கலாச்சாரா மற்றும் மாவட்ட செய்திகளையும் உலகம் அறிய கொண்டுச் செல்லும் ஊடகவியலாளர்களையும் நாம் கௌரவிக்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

கலை கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க கிராமங்கள்தோறும் கலா மன்றங்கள் உருவாக வேண்டும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)