
posted 8th November 2021
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோயாளர்களை சமூகத்திலிருந்து கண்டறிவதற்காக மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களம் மீண்டும் வீதிகளில் இறங்கி பி.சீ.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் நிலவி வந்த கொரோனா தொற்றில் மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களம் ஒன்றிணைந்த வேலைத் திட்டத்தின் காரணமாக மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களைவிட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மரணத்திலும் மிக குறைவாகவே காணப்பட்டு வந்தது.
ஆனால் கொரோனா தொடர்பாக அரசு முன்பு கடைப்பிடித்து வந்த மக்களின் வாழ்க்கையின் இயல்பு நிலையில் தளர்வை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்பொழுது மன்னார் மக்களும் சுகாதார நடைமுறைகளிலிருந்து தளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மன்னாரில் தற்பொழுது நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து வீதிகளில் சுகாதார சேவையாளர்கள் இறங்கி நோயாளர்களை சமூகத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்த மீண்டும் பி.சீ.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சனிக்கிழமை (06) நானாட்டான் சுகாதார அதிகாரி பிரிவில் முதல்நாள் வீதியில் மேற்கொண்ட பரிசோதனையில் முதல் 50 பரிசோதனைகளில் 06 பேர் தொற்றுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகளின் பிரிவுகளிலும் இவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாஸ் கூஞ்ஞ