
posted 21st November 2021
அரசு நடைமுறைப்படுத்தி வரும் “சௌபாக்கியா” வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில், மரக்கறி உற்பத்திக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலைய பெரும்பாக உத்தியோகத்தரான சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், குறித்த சௌபாக்கியா வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆவன செய்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மரக்கறிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியை முன்னெடுத்து வருகின்றார்.
இதனடிப்படையில் நிந்தவூர்ப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு வீட்டுத் தோட்டப் பயனாளிகளுக்கு சௌபாக்கியா விதைப் பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஹார்லிக் தலைமையில் குறித்த விதைப் பக்கட்டுக்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைஸால் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு விதைகளை வழங்கினார்.
வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையின் முக்கியத்துவம் தொடர்பிலும், குறிப்பாக மரக்கறி உற்பத்தியின் அவசியம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் நிகழ்வில் உரையாற்றும் போது வலியுறுத்தினார்.

ஏ.எல்.எம்.சலீம்