நவீன ஏ.ரி.எம். திறப்பு

கல்முனை மக்கள் வங்கிக் கிளையில் நவீனமயப்படுத்தப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்ற சேவை நிலையம் (ATM) இன்று செவ்வாய்க்கிழமை (23) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கிளை முகாமையாளர் ஏ.எல்.அப்துஸ் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய பிரதிப் பொது முகாமையாளர் ஜே.யூ.ஏ.அன்ஸார், அம்பாறை பிராந்திய முகாமையாளர் எச்.டி.குணரத்தின ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தனர்.

இந்த நவீனமயப்படுத்தப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்ற சேவை நிலையத்தில் பணம் மற்றும் காசோலை வைப்பிடலுக்கும் பணம் மீளப் பெறலுக்குமென தனித்தனி இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை, தற்போது தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வருகின்ற கல்முனை மக்கள் வங்கிக் கிளைக்கான நிரந்தரக் கட்டிடத்தை அதற்குரிய சொந்த நிலத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன்போது அதிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் உத்தியோகத்தர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நவீன ஏ.ரி.எம். திறப்பு

ஏ.எல்.எம்.சலீம்