தென்னிலங்கையருக்கு கடல் அட்டை பண்ணை அமைக்க புங்குடுதீவில் அனுமதி. பின்னணியில் பிரதேச சபை உறுப்பினர்

புங்குடுதீவில் உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு கடல் அட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேலணைப் பிரதேச சபை எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு 30 ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது .

குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் வேலணை பிரதேச சபை உறுப்பினரொருவர் இருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

மேற்படி கடலட்டை பண்ணை அமைக்கப்படுமானால் இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படலாமென்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதனை தவிர வேறு வழியில்லையென்றும் அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வேலணை பிரதேச சபையினரின் எந்தவித அனுமதியுமின்றி நடைபெறும் இச்செயற்பாடு குறித்து வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , செல்லப்பா பார்த்தீபன் , பிலிப் பிரான்சிஸ் , சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு மீனவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்திருந்தனர்.

உள்ளூர் மீனவர்களை ஏமாற்றி செய்யும் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், உள்ளூர் மீனவர்களில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சமூக மட்ட அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.

தென்னிலங்கையருக்கு கடல் அட்டை பண்ணை அமைக்க புங்குடுதீவில் அனுமதி. பின்னணியில் பிரதேச சபை உறுப்பினர்

எஸ் தில்லைநாதன்