தீப்பற்றிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தாய், குழந்தைகள், பெண் மரணம்!

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

தென் கிழக்கு லண்டனின் Bexleyheath நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இரு குழந்தைகளும் , இரு பெண்களுமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.நகரில் ஹமில்டன் வீதியில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்ற வீடு ஒன்றிலேயே நேற்று இரவு 20.30 மணியளவில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.

தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என நால்வரே அந்தத் தீ அனர்த்தத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துள்ளது.திடீரென தீ ஏற்பட்டு வீட்டைப்புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.அதனால் வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சிக்க நேர்ந்துள்ளது.

ஆறு தீயணைப்பு வண்டிகளுடன் சுமார் நாற்பது தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் ஏணியின் உதவியுடன் வீட்டின் முதலாவது தளத்தில் இருந்து இரண்டு பெண்களையும் இரு குழந்தைகளையும் மீட்டனர். எனினும் அவர்கள் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என்று லண்டன் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

தீயணைப்புப்படையினர் வருவதற்கு முன்பாக வீட்டு மாடியில் இருந்து வெளியே குதித்தவர் என்று கூறப்படும் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த பெண்களில் ஒருவர் தனது கணவனைத் தொலைபேசியில் அழைத்து வீட்டில் தீப்பற்றிவிட்டதாக அலறியுள்ளார். வீட்டில் இருந்து "நெருப்பு" "நெருப்பு" எனக் கத்தும் குரலகளைத் தாங்கள் கேட்டனர் என்று அயலவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

தொலைபேசியில் மனைவியின் அவலக் குரல் கேட்டு எரியும் வீட்டுக்கு ஓடிச் சென்ற கணவனால் அவர்களைத் தீயில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனது என்ற தகவலை உறவினர்கள் சிலர் லண்டன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

லண்டன் பெரு நகரப் பொலீஸார், தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கும் எனத் தாங்கள் சந்தேகிக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். எனினும் தடய மற்றும் புலன் விசாரணையாளர்கள் அங்கு தொடர்ந்து சோதனைகளை நடத்திவருகின்றனர்.

தீ அனர்த்தம் காரணமாக Bexleyheath நகரில் வீடு அமைந்திருந்த பிரதேசம் துயரில் மூழ்கியுள்ளது. அயலவர்கள் வீட்டின் அருகே மலர்க் கொத்துகளையும் விளையாட்டுப் பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனதை உருக்கும் இந்தச் சம்பவம் குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் லண்டன் நகர மேயர் சாதீக் கான்(Sadiq Khan) விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்ட பிரிவினருடன் தகவல்களைப் பெறுவதற்காக தொடர்பைப் பேணி வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

விபத்தில் சிக்கிய குடும்பத்தவர்கள் சில மாதங்களுக்கு முன்னரே அந்த வீட்டில்குடியேறி வசித்து வந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களது பெயர் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தீப்பற்றிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தாய், குழந்தைகள், பெண் மரணம்!
தீப்பற்றிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தாய், குழந்தைகள், பெண் மரணம்!

எஸ் தில்லைநாதன்