
posted 16th November 2021
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக் கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டம் இடம்பெற்றது.
திட்டமிட்ட குடியேற்றத்துக்கு எதிரான மக்கள் போராட்டக்குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
எங்கள் நிலம் எமக்கு வேண்டும்
தொல்பொருட் திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே
அதிகார இனவெறியைத் தமிழர்கள்மீது காட்டாதே
சிங்களக் குடியேற்றத்தை நிறுத்து
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்
கோசங்களையும் எழுப்பினர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேச சபை தலைவர்களான ச.தணிகாசலம், யோகராசா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் நி.பிரதீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்