
posted 29th November 2021
“ஊடகவியளார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப்.இரா துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
“இலங்கை அரசின் வன்முறையாளர்களால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
கடந்த வாரம் முல்லைத்தீவு, கிண்ணியாவில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையின் வெளிப்பாடு ஊடகத்துறைக்கு விடப்பட்ட ஒரு சவாலாகும்.
அரச பயங்கரவாதம், இனவாதச் செயற்பாடுகள், எழுத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனிதஉரிமைமீறல், மக்களின் அடக்கு முறை, தேசியம், பலஇன, பலமொழி, பல கலாசாரம், ஏனைய சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் ஊடகத்துறை ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை ஊடகவியலாளர்களைச் சாரும். இது தமிழ்பேசும் சமூகத்திற்கு மகுடம் சூட்டும் செயலாகும்.
சமூக நன்மைக்காக ஊடகவியலாளர்கள் உழைத்ததால் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் அல்லது மரணிக்கப் பட்டனர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். இவற்றைத் தாண்டி தப்பியவர்கள் பலர் உயிர் பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்தனர். இவர்கள் சமூகத்தால் கரம் கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட சம்பவம் தொடராமல் இருக்க நேற்று மட்டக்களப்பு நகரில் ஊடகவியலாளர்களால் மேற் கொள்ளப்பட்ட வெகுஜன ரீதியான போராட்டம் வன்முறையாளர்களின் கவனத்தை ஈற்று இருக்குமென நம்புகின்றேன்.
இவ் வன்முறை தொடராமல் இருக்க சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை செய்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்