"ஒரே நாடு ஒரே சட்டம்" ஆபத்தைக் கொண்டிருப்பதால் நிராகரிப்பதெனத் தீர்மானம்

"ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பெரும் ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்”, என்று யாழ்ப்பாணத்தில் நேற்று கூடிய தமிழ் பேசும் கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம், திண்ணை விடுதியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு, பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.

அரசாங்கத்தாலும், அரசாங்க ஆதரவுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

பல்லின, பல மொழி, பல மத மக்கள் வாழும் இந்த நாட்டில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பெரும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. இதனால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம்.

எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு இரு வாரங்களுக்குள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"ஒரே நாடு ஒரே சட்டம்" ஆபத்தைக் கொண்டிருப்பதால் நிராகரிப்பதெனத் தீர்மானம்
"ஒரே நாடு ஒரே சட்டம்" ஆபத்தைக் கொண்டிருப்பதால் நிராகரிப்பதெனத் தீர்மானம்

எஸ் தில்லைநாதன்