உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்குரிய சிறப்பு நாள்.  இறைவேண்டல் செய்யுங்கள் - ஆயர்கள் பேரவை

இலங்கையில் கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற உள்நாட்டு போரால் உயிரிழந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக நவம்பர் வரும் மூன்றாவது சனிக்கிழமையை வருடந்தோறும் கடைப்பிடிக்குமாறும் - இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி இறந்தோருக்காக இறைவேண்டல் செய்யுமாறு வடக்கு - கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு ஆயர்கள் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையிலேயே இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஆயர் வண. கலாநிதி ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, திருகோணமலை ஆயர் வண. கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை, மன்னர் ஆயர் வண. கலாநிதி இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர் வண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டவை வருமாறு,

“இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் காரணமாக எமது மக்கள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது இன்னுயிரை பறிகொடுத்தோர், தங்கள் உடன் பிறப்புக்களை, உறவுகளை இழந்தோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த வடுக்களால் அங்கவீனமுற்றோர், தொடர்ந்தும் எதுவிதமான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது சிறையில் வாடுவோர், உடைமைகளையும், இல்லிடங்களையும், காணிகளையும் வாழ்வாதரங்களையும் இழந்தோர், உயிர் அச்சறுத்தல் காரணமாக அரசியல் தஞ்சம் தேடி புலம்பெயர்ந்தோர் என பலதரப்பட்ட மக்களை நாம் குறிப்பிடலாம்.

“இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் புரிகின்றமை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத்தில் வந்தாலும் இந்த முயற்சிக்குப் பல கோணங்களிலிருந்தும் பல தடைகள் இன்று வரையில் இருந்து வருகின்றமை நோக்கக்தக்கது. இந்நிலையில் இலங்கை தேசத்தில் நடைபெற்ற கொடிய போரால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்களான நாம் நவம்பர் மாத்தில் வருகின்ற மூன்றாம் சனிக்கிழமையைத் தீர்மானித்துள்ளோம்.

“இதன்படி இந்த வருடம் நவம்பர் 20 திகதி சனிக்கிழமையை போரால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம். அன்றைய தினம் போரில் ஈடுபட்ட தரப்பினர், போரால் இறந்துபோன மதத்தவைர்கள், அரசியல்வாதிகள், அரச பணியாளர்கள். பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய ஆயர்களான நாம் அழைப்பு விடுக்கின்றோம். இதற்கென குறிப்பிட்ட இடமும் இல்லை, நேரமும் இல்லை. அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவேண்டல் புரியவும் அன்போடு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

“இந்த அழைப்பை வடக்கு-கிழக்கு கத்தோலிக்க ஆயர்களாக நாம் எமது மக்களுக்கு விடுத்தாலும் சமயங்களைக் கடந்து அனைத்து சமயத் தலைவர்களையும், தமிழ்கூறும் நல்லுலகையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். எமது இந்த முன்னெடுப்பு வெற்றியளிக்க அனைவரது ஆதரவையும் வேண்டி முடிக்கின்றோம்.”, என்றுள்ளது.

மூலப்பிரதியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

போரினால் இறந்தோர் நினைவு வடக்கு-கிழக்கு ஆயர்கள் பேரவை

உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்குரிய சிறப்பு நாள்.  இறைவேண்டல் செய்யுங்கள் - ஆயர்கள் பேரவை

எஸ் தில்லைநாதன்