
posted 17th November 2021
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்று செவ்வாய்கிழமை காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது.
தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, பேராசிரியர் அ. சண்முகதாஸ் மாநாட்டின் திறப்புரையை வழங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங்கப்பட்டது. பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை, பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை, பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, பண்டிதர் ம.ந. கடம்பேஸ்வரன், பண்டிதர் வீ. பரந்தாமன், பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு ஆகிய ஏழு புலமையாளர்களே கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமையும்,இன்று புதன்கிழமையும் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மநாட்டில் சுமார் 61 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


எஸ் தில்லைநாதன்