
posted 10th November 2021
இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினருக்கும் இடையில் நேற்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு 11.11.2021 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை கடந்த முதலாம் திகதி அவரின் கொழும்பு இல்லத்துக்குச் சென்று சந்தித்திருந்த இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினருடன் சந்திப்பை நடத்தக் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் நேற்று முன் தினம் குறித்த சந்திப்பு இடம்பெறும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற அலுவல்கள் காரணமாகவும், வேறு சில காரணங்களைக் கருத்தில்கொண்டும் நேற்று சந்திப்பை ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதுவருக்குச் சம்பந்தன் அறிவித்துள்ளார். சம்பந்தனின் கோரிக்கைக்கமைய சந்திப்பை நாளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்