
posted 24th November 2021
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் எம்.பிக்களான எம்மால் கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. சி.சிறிதரன் முறையிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு முறையிட்ட அவர் மேலும் கூறுகையில்,
"கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரச்சினைகளைப் பேசுவதற்காக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான ஜீவன் தியாகராஜாவுடன் பேசுவதற்காகப் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சசித்தேன். ஆனால், அவர் எனது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை.
வடக்கு மாகாணத்தின் ஆளுநர்களாக இருந்த திருமதி சார்ள்ஸ் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் நாம் எந்தவேளையில் தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் உடனடியாகப் பதில் வழங்குவார்கள்.
ஆனால், ஜீவன் தியாகராஜா எமது தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதில்லை என்பதை இங்குள்ள பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்" - என்றார்.

எஸ் தில்லைநாதன்