அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் ஒற்றுமை வேண்டும்

“அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே சந்திப்பு, கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதன்போது, கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஹக்கீமும், மனோ கணேசனும் கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்து கூறினர்.

இதில் வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புவதாக மனோ, ஹக்கீம் இருவரும் வலியுறுத்தி கூறினர்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது. நாங்களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்களித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்தத்தான் வேண்டும். தமிழ்க் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தளத்தில் தாம் எப்படி இணைந்து கொள்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றம் கூடும்போது, நமது கட்சி எம்பீக்களுடன் கலந்து பேசி உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் ஒற்றுமை வேண்டும்

எஸ் தில்லைநாதன்